எமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது! - அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு


தமிழ் மக்களின், உரிமைக்காக 1988 ஆம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த பூபதியம்மாவின் தியாகச் செயலை மதிக்காதோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதென, அன்னை பூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி, தெரிவித்தார். “பூபதியம்மாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்து வருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் வியாபார நோக்காகக் கொண்டு பல நிகழ்வுகளை வருடா வருடம் நடத்தி பணம் வசூலித்துக் கொண்டிருக்கும் உறவுகளுக்கும் இனி ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. பூபதியம்மாவின் முப்பதாவது ஆண்டு நினைவு தினம், எதிர்வரும் 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. அத்தினத்தை எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலையீடுகளோ அல்லது பொது நபர்களுடைய தலையிடுகளோ இல்லாமல் நடத்தப் போவதாகவும் அதற்கான சகல ஏற்பாடுகளையும் பிள்ளைகளாகிய நாங்கள் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அதுமாத்திரமல்லாமல், எங்களின் அனுமதியில்லாமல் யாரும் எவ்விதமான நிகழ்வுகளையும் நடத்தக்கூடாது என்றும், அம்மாவை வைத்துக்கொண்டு வெளிநாட்டிலோ அல்லது உள்நாட்டிலோ பணங்களை வசூலித்து வருகின்ற அமைப்புகளுக்கு எதிராகவும், மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் நேற்றுமுறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த வருடம், பூபதியம்மாவின் இரங்கல் ஆராதனையின்போது, உருவச் சிலையொன்றைச் செய்தும், அன்னையுடைய கல்லறைக் காணிக்கு சுற்று மதில் அமைப்பதோடு, புந்தோட்டமும் அமைத்துத் தருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அரசியல்வாதிகளால் பல வாகுறுதிகள் வழங்கப்பட்டும் கூட அந்த வாக்குறுதிகள் இதுவரை காலமும் நிறைவேற்றப்படாமல் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். “அதுமாத்திரமல்லாமல், 1988 ஆண்டு சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அம்மாவினால் முன்வைக்கப்பட்ட மூன்று கோரிக்கைகளும் இதுவரை காலமும் நிறைவேற்றாத ஒரு விடயமாகவே உள்ளது என்பதை நினைக்கும்போது மிகவும் மன வேதனையைத் தருகிறது” என்றும் தெரிவித்தார்.

No comments