யாழ்.மேல் நீதிமன்றில் துமிந்த கெப்பிட்டிவெலான ?




யாழ்.நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட வழக்கில் நாவற்குழி பகுதிக்கு அக் காலத்தில் பொறுப்பாக இருந்த துமிந்த கெப்பிட்டிவெலான யாழ்.மேல் நீதிமன்றில் முன்னிலையாகி உள்ளார்.


குறித்த வழக்கு விசாரணைகள் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது அப்போதைய காலப்பகுதியில் நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாக இருந்த தளபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்தே 1996ம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவத் தளபதியாக இருந்த துமிந்த கெப்பிட்டிவெலான மன்றில் முன்னிலையாகி உள்ளார்.

1996ம் ஆண்டு காலப்பகுதியில் நாவற்குழி படைமுகாமில் இராணுவத் தளபதியாக இருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர் கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்கள் காணாமல்போயிருந்தனர்.

தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் சட்டத்தரணிகளான கு.குருபரன் மற்றும் எஸ்.சுபாசினி ஆகியோர் ஊடாக யாழ்.மேல்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இவ்வழக்கில் 1ம் எதிரியாக துமிந்த கெப்பிட்டிவெலான 2ம் எதிரியாக இலங்கை இராணுவ தளபதி மற்றும் 3ம் எதிரியாக சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இதன்போது எதிரிகள் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இரண்டு வழக்கறிஞர்கள் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்
இதற்கு வழக்குத்தொடுனர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு தமது வாதங்களை முன்வைத்ததுடன், சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் நாவற்குழி தளபதியாக இருந்த துமிந்த கெப்பிட்டி வெலான தற்போதும் இராணுவ சேவையில் இருப்பதாக சுட்டிக்காட்டினார்கள்
வழக்கை விசாரித்த நீதிபதி மா.இளஞ்செழியன் இவ்வழக்கின் முதலாம் எதிரியான குறித்த இராணுவ தளபதி துமிந்த கெப்பிட்டிவெலானவை இன்று (ஏப்ரல் 2ஆம் திகதி) மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை தற்போது மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இடம்பெற்று வருகிறது. மனுதாரர்கள் சார்பில் எழுத்துமூல சமர்ப்பணம் மன்றில் முன்வைக்கப்பட்டது

No comments