தண்ணீர் தரமறுக்கும் கர்நாடகத்திற்கு மின்சாரம் வழங்கக்கூடாது - நெய்வேலியில் போராட்டம்

நெய்வேலியில் இருந்து கர்நாடகத்திற்கு மின்சாரம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் என்.எல்.சி.யை முற்றுகையிட திட்டமிட்டுள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், தண்ணீர் தரமறுக்கும் கர்நாடகத்திற்கு மின்சாரம் தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு, காவிரி மீட்புக் குழு மற்றும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் என்எல்சி முற்றுகைப் போராட்டம் அறிவித்துள்ளனர். இதற்காக நெய்வேலி அரசு மருத்துவமனையில் இருந்து புறப்படும் பேரணியில் பழ.நெடுமாறன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பங்கேற்கின்றனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்க திரண்டுள்ளவர்கள், மத்திய அரசைக் கண்டித்தும், கர்நாடகத்திற்கு நெய்வேலியில் இருந்து மின்சாரம் தர எதிர்ப்புத் தெரிவித்தும் பதாகைகளை ஏந்தி பேரணியில் ஈடுபட்டுனர்.

போராட்டக்காரர்கள் என்எல்சியை முற்றுகையிட திட்டமிட்டிருந்தாலும், கியூபாலத்தை தாண்டி பேரணி அனுமதிக்கப்படாது என்பதால் அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டிஐஜி, எஸ்பி, ஏடிஎஸ்பி மற்றும் 8 டிஎஸ்பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் 30 பேர், சப்இன்ஸ்பெக்டர்கள் 85 பேர், 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

No comments