அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுடன் இருந்து முரண்பட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை - டக்ளஸ்


தேர்தல் காலத்திலும் அதன் பின்னரான உள்ளூராட்சி மன்றங்களை அமைக்கும் காலத்திலும் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை தொடர்ந்தும் முன்னிறுத்திக் கொண்டிராது மக்களுக்கான சேவைகளைச் செய்ய அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும்” என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்  டக்ளஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வவுனியா நகர சபையின் ஆட்சி அமைப்பின் போது நடைபெற்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை என்றே கருதுகின்றேன். மனக் கசப்புக்களை முன்னிறுத்தாது சபைகளின் அதிகாரத்தை பெற்றுள்ள அனைத்து தரப்பினரும் தாம் மக்களுக்கான சேவையை கருத்தில்கொண்டு மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்காக ஒருமித்து செயலாற்ற வேண்டும்.
அவ்வாறான ஒரு சூழ்நிலை உருவாகும் போதே தமிழ் மக்கள் எதிர்பார்த்த பலாபலன்களை ஓரளவேனும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் என நம்புகின்றேன்.
மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொடுக்காமல் எந்த தரப்பினராலும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுடன் இருந்து முரண்பட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அந்தவகையில் சபைகளை பொறுப்பேற்ற அனைவரும் தேவையற்ற முரண்பாடுகளையும் தனிப்பட்ட வன்மங்களையும் கைவிட்டு மக்கள் நலன்களை முன்னிறுத்தி செயலாற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரசபையில் பெரும்பான்மை பெற்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை நேற்று (16) இடம்பெற்ற தலைவர், உப தலைவர் தெரிவின்போது, தமிழர் விடுதலைக்கூட்டணி, ஈ.பி.டி.பி யின் ஆதரவுடன் தோல்வியடையச் செய்திருந்தது.
இதனையடுத்து நகரசபை வளாகத்தில் குழப்பநிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments