துமிந்தவையும், மகிந்தவையும் நீக்கி விட்டு அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி


சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலர் பதவியில் இருந்து, துமிந்த திசநாயக்கவையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து மகிந்த அமரவீரவையும் நீக்குவதற்கும், சுதந்திரக் கட்சியின் நிர்வாகத்தைக் கைப்பற்றவும் கட்சியின் இன்றைய மத்திய குழுக் கூட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபற்றி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளதாவது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலர் பதவியில் இருந்து, துமிந்த திசநாயக்கவையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து மகிந்த அமரவீரவையும் நீக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளித்த சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா அதிபரிடம் கோரியுள்ளனர். இன்றிரவு நடக்கவுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலும் இந்தப் பிரச்சினை எழுப்பப்படவுள்ளது. இன்றைய கூட்டத்தில் கட்சியின் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்வதற்கும், 16 பேர் கொண்ட இந்தக் குழு திட்டமிட்டுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி உடனடியாக கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகி, சக்திவாய்ந்த மக்கள் அமைப்பாக கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இவர்கள் ஏற்கனவே தீர்மானித்துள்ளனர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

No comments