காட்டிக்கொடுத்துவிட்டார் மைத்திரி;ருவிட்டரில் புலம்பித்தள்ளிய நாமல்!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காட்டிக்கொடுக்கும் பழக்கத்தை நேற்று மறுபடியும் உறுதிப்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நேற்று 46 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
இது தொடர்பில் தனது ருவிட்டர் தளத்தில் பதிவிட்டிருக்கும் நாமல் ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சித்துள்ளார். ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காட்டிக்கொடுக்கும் பழக்கத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் ஊடாக மறுபடியும் நிரூபித்துவிட்டார். இந்தப் பிரேரணைக்கு ஒத்துழைக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை தூண்டிவிட்டு பின்னர் தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி மாற்றிக்கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியையும், சுதந்திரக் கட்சியையும் ஜனாதிபதி காட்டிக்கொடுத்துவிட்டார் என்று நாமல் எம்.பி கூறியுள்ளார்.

No comments