கப்டன் ஹீரோராஜ் மாவீரனின் நூல் அறிமுகவிழா!

பிரித்தானியாவில் கப்டன் ஹீரோராஜ் மாவீரனின் நூல் அறிமுகவிழா நேற்று22.04.2018 இடம்பெற்றது.
‘ஒரு வீர சுதந்திர வரலாற்றை எமக்குச் சொந்தமாக்கிச்சென்ற மாவீரர்களின் வரிசையிலே வழித்தடம் பதித்த கப்டன் ஹீரோராஜ் எனும் உன்னத மாவீரனின் வரலாற்றைச் செதுக்கிய நூல் ஒன்றினை வெளியிடுகின்ற பெரும்வாய்ப்பினை, அவர்தம் பெற்றோரும் , ஓரிரு நல்லுள்ளங்களும் முன்னின்று உழைத்ததனால்  நூல் அறிமுகவிழா இடம்பெற்றது.


இருந்தாலும் அதற்கிருந்த ஒருவித கவர்ச்சி குறையவில்லை. இப்போதும் பெயரைக் கேட்கும்போதே எங்களில் பலருக்கு பழைய ஞாபகங்கள் கிளறப்படலாம். கூடவே ஒரு சிலருக்கேனும் கப்டன் ஹீரோராஜ் ஞாபகமும் வரலாம்.
பலாலி இராணுவத் தளம். ஹீரோராஜ் கூடவே நாலைந்து சகபோராளிகளுடன் கைதியாகத்  தடுத்து வைக்கப்பட்டிருந்தான். கலகலப்பான பெடியன். ஆமிக்காரன் ஒருத்தன் கிளி ஒன்று வளர்த்துக் கொண்டிருந்தானாம். இவர்களோடு அதுவும் சக கைதியாகக் கூட்டுக்குள்ள இருந்திருக்கிறது. "எப்பிடியாவது கிளிய ரிலீஸ் பண்ணவேணும் மச்சான்" ஹீரோராஜ் அடிக்கடி சொல்லிக் கொண்டு இருப்பானாம்.  ஒருநாள் நல்ல சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. ஆமிக்காரன் அசந்திருந்த நேரம் பார்த்து ஒப்பரேசன சக்சஸா முடிச்சிட்டான். கிளியை வெளியில் விட்டாயிற்று. ஆனால் பாவம் அதனால் பறக்க முடியவில்லை.
சிறகு வெட்டப்பட்டு வளர்ந்த கிளி. தத்தித் தடுமாறிப் பறக்க முயற்சி செய்கிறது. முடியவில்லை. இங்கே இவர்களுக்குப் பதைப்பாக இருக்கிறது. ஆமி எந்த நேரத்திலையும் இந்தப்பக்கம் வந்திடலாம். "டேய் பறந்திடுறா பறந்திடுறா" ரசசியம் பேசுகிற குரலில் ஹீரோராஜ் சொல்லிக் கொண்டிருக்கிறான். கிளியால் பறக்க முடியவில்லை. ஆமி வந்துவிட்டான். பார்க்கிறான். கிளி வெளியில். கூண்டுக்கதவு திறந்து கிடக்கிறது. இவர்களைச் சந்தேகமாகப் பார்க்கிறான். அசந்து தூங்குவது போலப் 'போஸ்' குடுத்துக் கொண்டிருக்கிறார்கள். திரும்பக் கிளியைக் கூண்டில விட்டுப் பூட்டிவிட்டுப் போய்விட்டான். போகும்போது ஹீரோராஜை ஒரு மாதிரிப் பாத்துச் சிரிச்சிட்டுப் போனானாம். அவனுக்கு விளங்யிருக்கலாம்.
பிறகு சொன்னானாம், "எனக்குத் தெரியும் நீதான் பண்ணியிருப்ப". அந்தக் கூட்டத்துக்குள்ளே இவன்தான் இப்பிடியான பேர்வழி என்பது அவர்களுக்கும் தெரிந்திருந்தது. "ச்சே அநியாயமாத் திரும்ப அவனிட்டயே மாட்டீட்டுது" அடிக்கடி அந்தக் கிளியைப் பற்றிச் சொல்லிக் கவலைப்படுவானாம். பெற்றோர், சகோதரர்கள் பார்க்க வரும்போது, ஆமிக்காரர் கொஞ்சம் தள்ளி பக்கத்திலயே நிற்பார்களாம். என்ன பேசுகிறார்கள்? அதிலிருந்து போராளிகள் பற்றி ஏதாவது தகவல்கள் கிடைக்குமா? வெளியில் இருக்கும் போராளிகளிடமிருந்து ஏதேனும் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகிறதா? என்கிற ரீதியில் கண்காணித்துக் கொண்டிருபார்கள். இந்த விஷயத்தில் எம்மவரின் புத்திசாலித்தனத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லையே? எல்லாரும் வலு அலேர்ட். ஹீரோராஜ்தான் தலையிடியைக் கொடுத்துக் கொண்டிருந்தான். அம்மா, அப்பா பார்க்க வரும்போதெல்லாம் எடுத்த உடனேயே மிக இயல்பாகச் சிங்களத்தில பேச ஆரம்பிப்பார்க்களாம். நாட்டுநிலைமை, வெளிநிலைமை எல்லாப் பிரச்சினையும் அதிலேயே போகும். தமிழோ, ஆங்கிலமோ இந்தியன் ஆமிக்குத் தெரியலாம். சிங்களம் எங்கே தெரிந்திருக்கப் போகிறது?
உண்மையில் ஹீரோராஜுக்கு சிங்களம்தான் சரளமாகப் பேச வந்தது. தமிழ் ஓரளவுக்குப் பேச மட்டும்தான் தெரியும். சிறையிலதான் ஹீரோராஜ் தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டிருந்தான். அவன் படித்துக் கொண்டிருந்தது யாழ்ப்பாணம் சிங்கள மகாவித்தியாலயத்தில சிங்கள மீடியத்தில். எண்பத்திமூன்றில் அங்கே குண்டு வைத்துப் பள்ளிக்கூடத்தை மூடியதும், ஹீரோராஜோட அப்பாவே நேரில் கூட்டிக் கொண்டுவந்து இயக்கத்தில சேர்த்து விட்டாராம். தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டது பலாலியில் கைதியாக இருந்தபோதுதானாம். அதுவரைக்கும் தமிழ் பேச மட்டும்தான் தெரியுமாம். ஒருவழியாகத் தமிழ் படித்து, பேப்பர், ஆனந்தவிகடன் வாசிக்க தொடங்கும்போது விடுதலையாகி வெளியில் வந்துவிட்டார்கள். இந்திய இராணுவம் திரும்பிப் போயிருந்தது. ஈழநாதத்தில் போராளிகள் பற்றி ஒரு முழுப் பக்கத்தில் வெளிவந்துகொண்டிருந்த 'விழுதுகள்' தொடரில் ஹீரோராஜ் பற்றி விரிவாக எழுதியிருந்தது.
தொண்ணூறாம் ஆண்டு யாழ் கோட்டை முற்றுகைச் சமரில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஒரு சியாமாசெட்டி விமானத்தை ஃபிஃப்டி கலிபரால் சுட்டு வீழ்த்தியிருந்தான் கப்டன் ஹீரோராஜ்.
தொண்ணூறாம் ஆண்டு புரட்டாதி மாதம் பதினைந்தாம் திகதி. விமானம் சுட்டு பண்ணைக்கடலில் வீழ்த்தப்பட்ட அடுத்தநாள் விடிகாலைப் பொழுது. விமானத்தின் பாகங்களை பின்பு மக்கள் காட்சிக்கு வைப்பதுதானே வழமை. அருகில் கடலுக்குள் சக தோழர்களுடன் இறங்கிய ஹீரோராஜை மண்டைதீவிலிருந்த ஒரு இராணுவ 'சினைப்பர்'காரன் பார்த்துக் கொண்டிருந்தான்.
பதின்ம வயதுகளில் போராட்டத்தில் இணைந்து இருபதுகளில் இவ்வுலகிலிருந்து விடைபெற்றுக் கொண்ட, கப்டன் ஹீரோராஜ் என்கிற, தந்தையால் போராட்டத்தில்  இணைத்துவிடப்பட்ட ‘பிரபு’ என்கிற பிரபாகரன் இன்னும் யாரோ ஒருவர் இந்த உலகில் ஏதோ ஒரு பகுதியில் ஏற்றி வைக்கும் நவம்பர் மாதத்து ஒற்றை மெழுகுவர்த்தி மூலம் நினைவுகூரப்படலாம். இன்னும் ஏராளமான ஹீரோராஜ்கள் போலவே! 

No comments