கனடாவில் மருத்துவராவதற்கு ஈழத் தமிழ்ப் பெண் நடத்திய பெரும் போராட்டம்!


கனடாவில் குடியேறிய இலங்கைத் தமிழ்ப் பெண், அங்கு மருத்துவராகத் தகுதி பெறுவதற்கு நடத்திய நீண்ட போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். கனடாவில் குடிபுகுந்த இலங்கைப் பெண்ணான செல்வி குமரன் ஒரு மருத்துவராவதற்காக ஒன்பது ஆண்டுகள் கல்வி பயின்றார். இறுதியாக Residency என்னும் பயிற்சியை முடிப்பதற்காக அவர் அமெரிக்கா செல்ல வேண்டும். அவர் அமெரிக்கா சென்று பயிற்சியை முடித்து விட்டு திரும்ப கனடாவிற்கு வரும்போது அவருக்கு வேலை வாய்ப்பு தயாராக இருக்கிறது என்பதை உறுதி செய்வதற்காக கனடா அரசாங்கத்திடம் இருந்து "statements of need" என்னும் தேவைச் சான்றிதழ் ஒன்றைப் பெற வேண்டும். செல்வி அமெரிக்காவில் residency பயிற்சியை மேற்கொள்வதற்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்களை அனுப்பலானார். ஒன்றல்ல, இரண்டல்ல, 200 விண்ணப்பங்கள், 20 நேர்முகத்தேர்வுகள். இறுதியாக 20,000 டொலர்கள் செலவழித்தபின் அமெரிக்காவிலுள்ள மிச்சிகனில் அவருக்கு பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் கனடா அரசாங்கத்திடம் இருந்து "statements of need" என்னும் சான்றிதழ் பெறுவதற்காக கனடா மருத்துவத்துறையிடம் விண்ணப்பித்தார் செல்வி.ஆனால் மருத்துவத்துறையிலிருந்து அவருக்கு வந்த மின்னஞ்சல், ஏற்கனவே 30 சான்றிதழ்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும் மீண்டும் அடுத்த ஆண்டு விண்ணப்பிக்குமாறும் தெரிவித்தது. இவ்வளவு பணம், இவ்வளவு நேரம் செலவிட்டபிறகு இப்படி ஒரு பதில் வந்ததும் அதிர்ந்துபோனார் செல்வி. காலம் வீணாவது மட்டுமல்ல, மீண்டும் அடுத்த முறை விண்ணப்பிக்கும்போது பயிற்சி மேற்கொள்வதற்கான இடம் இருக்குமா என்று சொல்ல முடியாது. விசாரித்தபோது நாடு முழுவதிலுமுள்ள ஒவ்வொரு மாகாணத்திலும் வேலை வாய்ப்புக்கான இடம் இருக்கிறதா என்று ஆய்வு செய்து பின்னர் அதன் அடிப்படையிலேயே "statements of need" சான்றிதழ் வழங்குவதாக கனடா மருத்துவத்துறை கூறியது. செல்வியின் விண்ணப்பம் மறுக்கப்பட்ட விடயம் வெளியில் வந்ததும் ஏராளமான மருத்துவர்கள் Saskatchewan பகுதியில் குழந்தை மருத்துவர்களுக்கான தேவை இருப்பதாக கனடா மருத்துவத்துறைக்கு கடிதங்கள் அனுப்பினர்.செல்வி தானும் நேரடியாக இரண்டு MLAக்கள், இரண்டு MPக்கள், மாகாண சுகாதாரத்துறை அமைச்சர், கனடாவின் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் ஒரு செனேட்டர் ஆகியோரை சந்தித்து நியாயம் கேட்டார். இறுதியாக கனடா மருத்துவத்துறை தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகவே செல்விக்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று ஒரு பெரிய பல்டி அடித்தது. இவ்வளவு அலைக்கழிப்பு, போராட்டத்திற்குப்பின் செல்விக்கு "statements of need" சான்றிதழ் வழங்கப்பட்டது. சோர்ந்து போகாமல் விடாமுயற்சியுடன் போராடிய செல்வி கடைசியில் வெற்றி பெற்றுவிட்டார். என்றாலும் அதற்காக அவர் அனுபவித்த கஷ்டங்கள் ஏராளம் என்பதைப் பார்க்கும்போது அயல் நாடுகளிலிருந்து கனடா செல்பவர்கள் ஒரு நல்ல பணியில் அமர்வதற்கு எவ்வளவு பாடு பட வேண்டியுள்ளது என்பதையே செல்வியின் கதை நமக்கு காட்டுகிறது.

No comments