மட்டக்களப்பில் ஊடகவியலாளர் சிவராமின் படுகொலைக்கு நீதி கோரிப் போராட்டம்!

இதுவரை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாளர்களுக்கு நீதி கோரி, மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று, இன்று (28) நடைபெற்றது.

ஊடகவியலாளர் சிவராமின் 13ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம்,  மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகளை ஏற்பாடு செய்திருந்தன.

மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்காவுக்கு முன்னால் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மற்றும் சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன் மட்டக்களப்பு மாநகர மேயர் ரி.சரவணபவன் உட்பட மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பேரணியின் இறுதியில் ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி கையொப்பங்களும் பெறப்பட்டன.

No comments