50 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் தம்பதியர்!

அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹரால்ட் ஹோலண்ட் (83). இவருக்கும் லில்லியன் பார்ன்ஸ் (78) என்பவருக்கும் கடந்த 1955-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஐந்து குழந்தைகளைப் பெற்று சந்தோசமாக வாழ்ந்து வந்த இந்தத் தம்பதி, கடந்த 1967-ம் ஆண்டு கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தது. சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்ற இவர்கள், தனித்தனியே மறுமணமும் செய்து கொண்டனர்.
இருவருமே கடந்த 2015-ம் ஆண்டு தங்கள் துணையை இழந்தனர். மகன், மகள்கள் திருமணமாகி சென்றதையடுத்து இருவரும் தனிமையில் வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் ஒரு துணை தேவைப்பட்டது. எனவே, அவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக தங்கள் விருப்பத்தை இரு குடும்பத்தினரிடவும் தெரிவித்து திருமணத்திற்கு அனுமதி பெற்றனர். இதையடுத்து வரும் 14-ம் தேதி அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களது குடும்பத்தார் திட்டமிட்டுள்ளனர். அவர்களது திருமணம் லெக்சிங்டனில் நடைபெற உள்ளது. இத்திருமணம் குறித்து ஹோலன்ஸ் - பார்ன்ஸ் ஜோடி கூறுகையில், “கடைசி காலத்தை நாங்கள் இருவரும் ஒன்றாக கழிக்க விரும்புகிறோம்” என கூறினர்.

50 ஆண்டுகள் கழித்து மீண்டும் திருமணம் மூலம் கணவன் - மனைவியாகப் போகும் அந்த தம்பதியருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.


No comments