சவுதியில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன

சவுதி அரேபியாவில் சினிமா திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன. கடந்த 38 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் சினிமா திரைப்படங்கள் பார்ப்பதற்கு தடை விதித்திருந்தது. மத கட்டுப்பாடுகளை சினிமா மீறுவதாகக் கூறியே இத்தடை அமுலில் இருந்து வந்தது.

ஆனால் தற்போது சவுதியின் பட்டத்து இளவரசராக இருக்கும் முகமது பின் சல்மான், நாட்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக குடிமக்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த பல்வேறு தடைகளை அவர் விலக்கி வருகிறார். இதில் முக்கியமாக, பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை விலக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து சுமார் 38 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக அந்த நாட்டில் சினிமாவுக்கும் அனுமதி வழங்க சவுதி அரசு முடிவு செய்தள்ளது.

இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டில் 38 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் 18-ம் தேதி முதல் தியேட்டர்கள் செயல்படத் தொடங்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு அரசின் ஊடகங்கள் கூறுகையில், சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் ஏப்ரல் 18-ம் தேதி முதல் சினிமா தியேட்டர்கள் செயல்பட தொடங்கும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சவுதியில் உள்ள 15 நகரங்களில் 30 முதல் 40 தியேட்டர்கள் வரை திறக்கப்படும்.

சினிமா மீதான தடை விலக்கப்படுவதால் பொழுதுபோக்குத்துறை வளர்ச்சி காணும் என சவுதி அரசு தெரிவித்து உள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பை ஏற்படுத்துவதுடன், பலருக்கு நிரந்தர வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments