பூச்சியத்திலிருப்பது முன்னணிக்கு புதியதல்ல:வி.மணிவண்ணன்!

ரெமீடியஸ் குப்பைக்கூடைக்குள் வீழ்ந்துவிட்டார்.இந்நிலையில் அவர் யாழ்.நீதிமன்ற வளாகத்தினில் வைத்து எங்களுடன் கூட்டு வைப்பது தொடர்பாக பேசியிருந்த போது அதனை வெட்டொன்று துண்டு இரண்டாக நிராகரித்திருந்ததுடன் குப்பைக்கூடையிலிருந்து வெளியே வர அழைத்திருந்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை பத்திரிகையாளர்களை கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரன் சகிதம் அவர் சந்திருந்தார்.

வெறுமனே சபைகளை கைப்பற்றுவதற்காக எவருடனும் பேச்சு நடத்த முன்னணி தயாராக இருக்கவில்லை.குறிப்பாக தமிழர் விடுதலைக்கூட்டணியுடன் கூட பேரம் பேச விரும்பவில்லை.அதன் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி பற்றியும் அவரது கடந்த கால செயற்பாடுகள் சொல்லித்தெரியவேண்டியதில்லை.

அதிலும் தேர்தல் காலம் வரை மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்திய கட்சிகளுடன் பின்னராக கூட்டு சேர்வது என்பது மக்களை ஏமாற்றுகின்ற துரோகம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.மாநகரசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் கூட்டமைப்பிற்கும் ஈபிடிபிக்குமிடையே முன்னதாகவே முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தது.அங்கு முன்னணியினை மூன்றாவது இடத்திற்கு தள்ளிவிட இரு தரப்புக்களும் சதி செய்திருந்தன.
அதன் பிரகாரம் ஈபிடிபி கட்சியானது ஜ.தே.க உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி விஜயகாந்த் வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்திற்கு வர முற்பட்டிருந்தது. ஆனால் விஜயகாந்த் வருகை தர சிறைச்சாலை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

இதனால் சம சாக்குகளையே ஈபிடிபி பெற்றதும் பின்னர் ரெமீடியஸ் போட்டியிலிருந்து விலகியிருந்ததும் தெரிந்ததே.

அப்போது கூட ரெமீடியஸ் என்னும் பேரம் பேசியிருந்தார்.முன்வரும் இரு வருடங்கள் ஈபிடிபியும் கடைசி இரண்டுவருடங்கள் முன்னணியும் ஆட்சியமைக்க முடியுமென ரெமீடியஸ் கோரியிருந்தார்.
ஆனால் நாம் மிக ஆணித்தரமாக அதனை நிராகரித்திருந்தோம்.

எமக்கு பூச்சிய நிலையிலிருப்பதொன்றும் கடினமல்ல.ஏனெனில் இதுவரை அப்படிதான் இருந்தோம்.
கதிரையேற மக்கள் விரோக சக்திகளது ஆதரவை பெற்றுத்தான் ஆட்சிக்கு வரமுடியுமென்றால் அது தேவையில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments